அப்போது அந்த வயதினில் … கவிதை
என்னைத் தேடி வந்தடைந்தது. எனக்குத் தெரியாது,
பனிக்காலத்தில் இருந்தா அல்லது நதியில் இருந்தா,
எங்கிருந்து அது வந்தது என எனக்குத் தெரியாது.
எப்படி அல்லது எப்போது என எனக்குத் தெரியாது,
இல்லை அவை குரல்கள் அல்ல,
அவை வார்த்தைகள் அல்ல, மெளனமும் அல்ல,
ஆனால் எனக்கு அழைப்பாணை கிடைத்த வீதியிலிருந்து,
இரவின் கிளைகளிலிருந்து,
எதிர்பாராமல் மற்றவரிடமிருந்து,
கட்டுக்கடங்காத நெருப்பிற்கு மத்தியிலிருந்து,
அல்லது தனியாகத் திரும்பி வரும்போது,
நான் அங்கே முகமற்றவனாக இருந்தபோது
என்னை அது தொட்டது.
எனக்கு என்ன சொல்வததென்றே தெரியவில்லை,
என் வாய்க்கு அதை எப்படி அழைப்பதென்று புரியவில்லை,
என் கண்கள் பார்வையற்றுப் போயின, ஆயினும்
என் ஆன்மா எதையோ உணரத் தொடங்கியிருந்தது,
மனக்கலக்கம் அல்லது மறந்து போன இறக்கைகள்,
அந்த நெருப்பை அடையாளம் கண்டு
நான் எனக்கான பாதையை ஏற்படுத்திக் கொண்டேன்,
வலுவற்ற முதல் வரியை நான் எழுதினேன்
தெளிவற்ற, சாரமற்ற, முற்றிலும் அபத்தமான,
ஒன்றும் அறியாதவனின் பரிசுத்த ஞானத்தை.,
அப்போது திடீரென சொர்க்கம் நெகிழ்ந்து திறக்க
கண்டேன் நான்,
கிரகங்களை,
நடுங்கும் தோப்புகளை,
துளைக்கப்பட்ட நிழல்களை,
தொடுக்கப்பட்டப் புதிர்களை,
நெருப்பு மற்றும் மலர்களை,
குளிர்ந்த இரவு மற்றும் பிரபஞ்சத்தை.
அற்பப் பிறவியான நான்,
அபாரமாய் ஒளிரும் வெறுமையைக் குடித்தவனாக,
விளங்காத மர்மத்தின் உருவத்தை ஒத்தவனாக,
முற்றிலும் நான்
நரகத்தின் ஓர் அங்கமென உணர்ந்தவனாக,
காற்றோடு என் இதயம் நொறுக்கிச் சிதற
உருளுகின்றேன் நட்சத்திரங்களுடன்.
*
மூலம்: “Poetry” By Pablo Neruda