உடலின் அசைவுகள் மெல்ல தளர்ந்து சாய
கண்கள் சொருகி காரிருள் சூழ
தேடிய நிம்மதி எட்டிடுமோ?
இல்லை பயமூட்டிய நினைவுகள்
கனவாய் வந்து சீண்டிடுமோ?
அனிச்சையாய் தேகம் நகர
கண்கள் மூடியும் மனம் சலனமாய் நோக
இருள் சூழ்ந்த அறையினுள்
கண்கள் திறவா நொடியிலும்
ஆயிரம் எண்ணங்கள் ஊடுருவ
தன்னிச்சையாய் செயல்படும் சுவாச பாதையும்
தன்னிலை மறந்து திணற
பதட்டத்தோடு சட்டென விழிப்பு...!
வரமா சாபமா இந்த இரவுகள்?
கண் திறந்து பார்த்து பதிந்த காட்சிகள் யாவும்
கண் மூடியும் கொல்லும் மாயம் என்ன?
தனியே நானும் என்றாலும், இவ்விருளிலும்
உடன் தெரியும் உருவம் மாயையா? இல்லை,
மதிக்கு எட்டாத மர்மமா?
நவரசம் என்பதில் சில ரசம் மறைந்து வர
அவற்றை கண்சாடைக்காக உருவாக்கும் மூளை
இந்த மனதை விட வலிமையானதா!?
இல்லை இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று கூட்டு களவானியா!?
சுழலும் காலச்சக்கரத்தின் வேகம்
இந்த முட்டாள் மூளையின் வேகத்தை விட அதிகம் போல...
ஒரு நாள் முழுதும் தொலைந்தே போகும், ஈடுசெய்ய முடியாமல்
அன்று சில வர்ணங்கள் உதிக்கும்
கலந்தாலோசிக்க சுற்றிலும் பல வார்த்தைகள் இருக்கும்
மையம் அமைதியாய் மறைந்திடும், மௌனமாயும்...
@samcb