Kathai Solli

முயல் விடு தூது - 28வது கதை


Listen Later

முயல் விடு தூது
ஹாசன் ஒருநாள் மிகவும் வருத்தமாக இருந்தார். வியாபாரி எஸ்தி ஹாசனுக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டார். எப்படியும் ஒருநாள் தன் பணத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று உறுதியாக இருந்தான் ஹாசன்.
வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தார். அவரைக் கண்டதும் அவரது மனைவி அவரை வரவேற்று, “வந்துவிட்டீர்கள்! உங்களுக்குத்தான் காத்திருந்தேன்! உங்கள் நண்பர் அலி வந்தார். அவரால் இன்று மதியம் விருந்திற்கு வர இயலாதாம். ஆனால் நான் ஏற்கனவே சமைத்து விட்டேனே! என்ன செய்வது?” என்று கூறினார்.
“விருந்திற்கு என்ன சமைத்திருக்கிறாய்?” என்று கேட்டார் ஹாசன். பிரியாணி சமைத்திருப்பாதாகக் கூறினார் அவர் மனைவி. “ரொம்ப மகிழ்ச்சி! எனக்குத்தான் பிரியாணி பிடிக்குமே! அவ்வளவையும் நானே சாப்பிடப்போகிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
அப்போது, ஒரு மூலையிலே இரண்டு முயல்கள் கூண்டில் இருப்பது கண்டு மனைவியை ஏதென்று கேட்டார். அவரது நண்பர் அலி அன்பளிப்பாகக் கொண்டு வந்ததைக் குறிப்பிட்டார் மனைவி. அப்போது ஹாசனுக்கு ஓர் யோசனை தோன்றியது. விருந்துக்கு ஒருவரை அழைத்து வருவதாகக் கூறி, கையில் ஒரு முயலைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டார்.
நேரே தன்னை ஏமாற்றிய வியாபாரி எஸ்தியின் வீட்டிருக்குச் சென்று, “காலையில் உங்களை நான் கடுமையாகப் பேசிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். அதை நேர்செய்ய நான் உங்களுக்கு விருந்தளிக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் மறுக்காமல் வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
வியாபாரி எஸ்தியும் மகிழச்சியாக, விருந்துக்கு வருவதாகக் கூறினார். உடனே ஹாசன் தன் கையிலிருந்த முயலிடம், “குட்டி முயலே! நீ விரைந்தோடிப் போய் என் மனைவியிடம், நான் விருந்துக்கு ஒருவரை அழைத்து வருகிறேன். பிரியாணி தயாரித்து வைக்கச் சொல்லிவிடு” என்றார். கையிலிருந்த முயலை அவர் விடுவித்ததும் அது எங்கோ ஓடி மறைந்தது.
வியாபாரி எஸ்திக்கு அந்த அதிசய முயலைக் கண்டு அளவில்லா ஆச்சரியம். “அந்த முயல் கண்டிப்பாக விஷயத்தை உன் மனைவியிடம் சொல்லுமா?” என்று ஹாசனைக் கேட்டார். ஹாசன் அதற்கு, “ஓ! கண்டிப்பாக. அந்த முயல் சேதி சொல்லப் பழக்கப்படுத்தப்பட்டது. இதற்கு முயல் விடு தூது என்று பெயர்” என்றார்.
மதியம் வியாபாரி எஸ்தி, ஹாசனின் வீட்டிற்கு விருந்துக்கு வந்தார். இருவரும் சுவையான பிரியாணியை ஒரு பிடி பிடித்தனர்.
அங்கே மூலையில் ஒரு முயல் கூண்டுக்குள் இருப்பதைக் கண்ட எஸ்தி ஹாசனிடம், “ஆக முயல் வந்து உன் மனைவியிடம் சேதியைச் சொல்லியிருக்கிறது!” என்று சொன்னார். ஹாசன், “அதிலென்ன சந்தேகம்!” என்றார்.
இந்த அதிசய முயல் தன்னிடம் இருந்தால் நண்பர்களிடம் காட்டி அசத்தலாமே என்று ஆசைப்பட்ட எஸ்தி ஹாசனிடம், முயலை தனக்கு விற்றுவிடுமாறு கேட்டார். ஈடாக 50.. 60.. 75.. பொன் தருவதாகக் கூறியும் ஹாசன் அதற்கு மறுத்துவிட்டார்.
எஸ்தி விடாமல் 100 பொன்னும் ஹாசனுக்கு முன்னரே அவர் தரவேண்டிய பணமும் சேர்த்துத் தருவதாகக் கூறினார். ஹாசன் அரை மனதாக ஒப்புக்கொள்வது போல், முயலை எஸ்திக்கு கொடுத்தார். பேசியபடி பணமும் ஹாசனின் கையில் வந்தது.
முயலைப் பெற்றுக்கொண்ட எஸ்தி, முயலிடம், “குட்டி முயலே! ஓடிப்போய் என் மனைவியிடம் நான் இன்று மாலை தேநீருக்கு நண்பர்களை அழைத்து வருகிறேன். இனிப்பும் சேர்த்துத் தயாரித்து வைக்கச் சொல்லிவிடு” என்று கூறி முயலை கையிலிருந்து விடுவித்தார். முயல் ஓட்டமாக ஓடி எங்கோ மறைந்தது.
மாலை வேளை, எஸ்தி தன் நண்பர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். மனைவியிடம் தேநீரும் இனிப்பும் தயாரா என்று கேட்டார். மனைவி அதற்கு, “முன்னரே சொல்லியிருந்தால் தயாராக வைத்திருப்பேனே” என்றார். நான் முயலிடம் சொல்லி அனுப்பினேனே! முயல் சொல்லவில்லையா?” என்றார் எஸ்தி. அவரது மனைவி குழப்பமாக, “எந்த முயல்? முயல் எப்படி சொல்லும்” என்று கேட்டார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த எஸ்தி தன் நண்பர்களை அனுப்பிவிட்டு, நேரே ஹாசனிடம் சென்று முறையிட்டார், “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். உன் முயல் என் வீட்டிற்கு சென்று சேதி சொல்லவில்லை”.
அதற்கு ஹாசன், “அது உன் தவறு. நீ உன் வீட்டு முகவரியை முயலிடம் தெரிவிக்கவில்லையே” என்று கூறி சமாளித்துவிட்டார்.
விழி பிதுங்கி நின்ற எஸ்திக்கு, தான் ஹாசனுக்குத் தரவேண்டிய பணம் வட்டியுடன் போய்ச் சேர்ந்தது அப்போது தான் புரிந்தது.
---
கதை மூலம்: Tinkle Double Digest #16
...more
View all episodesView all episodes
Download on the App Store

Kathai SolliBy Kathai Solli

  • 5
  • 5
  • 5
  • 5
  • 5

5

1 ratings