கரம் பற்றுவாய் என உன்னை நம்பி
என் மனம் நானும் விரும்பி தொலைத்தேன்
என் ஆசை யாவும் ஏற்று
உன் தோளில் எனை சுமப்பாய் என நம்பி இருந்தேன்
தித்திக்கும் இனிப்போடு திகட்டாத காதலோடு
நித்தம் நித்தம் நேரத்தை தான் சீண்டி பார்த்தோம்
வாய்மொழி வார்த்தையன்றி குறுந்செய்தி சேவையும்
பெரும் சேவை தான் செய்தது நம் வார்த்தைகள் சுமந்து
உன்னில் பிடித்தவை எனதாகியும்
என்னில் பிடித்தவை உனதாகியும்
உணர்வில் அது கலந்து
மதி மயங்கியே வைத்திருந்தது
காலம் ஒரு அரக்கன் போல
பேசும் மொழிகளும் அவன் விரலசைவினிலோ?
பிடித்தவற்றை விரும்பி ரசித்து செய்த நாட்கள் கரைந்து
விரும்பிவிட்டாய், செய்தே ஆக வேண்டும் என்று வந்து நிற்கும் நாளினை
நானும் எதிர்பார்க்கவில்லை
இதுவரை ரசித்த செயல்களும்
அந்த ரசனையில் மயங்கி., பார்த்தும் சொல்ல தைரியம் இல்லா விசயங்களும்
மெல்ல மெல்ல வேரூன்றி வார்த்தையாய் வெளிவந்தது
முதலில் அன்பாக... மெல்ல அது கட்டளையாக
முடியாது என்று சொற்கள் பரவ
சிறு சிறு ஏக்கங்கள்...
பின் அதுவே மெல்ல கோபமாக மாறி வர.,
நாட்கள் நகர நகர மூர்க்கமாய் மாறுவது ஏனோ?
இனிமையாய் ஆரம்பித்த நாட்களில்
சிறு சிறு கசப்பும் புளிப்பும் சகஜம் தான்
வெயிலும் குளிரும் இனிமை தான் அளவோடு இருக்கும் வரை
எவ்வளவு தான் தாங்கும் இந்த சுருள் கம்பியும் இந்த அழுத்தத்தை
தினம் தினம் அழுது சிவந்த கண்களுக்கு
காலையில் மையிட்டு மறைக்கும் நாடகம் போதும்
எதிர் எதிர் பாதை கொண்டு
ஒரு தடத்தில் பயணிப்பதிலும் அர்த்தம் இல்லை
போதும் இந்த வலிகள் வேதனைகள்...
வழி மட்டும் விட்டு விடு
மீண்டும் உன்னை பார்க்கும் வேளையில்
புன்முறுவல் செய்யும் வாய்ப்பாவது இருக்கட்டும்
மீண்டும் அழுது, மீண்டு மீண்டு நானும் வாழ்வது
நாணல் போல் நதியோரம் நீந்திடவே...
அருகினில் இருந்து கண்ணீரில் வாழ்வதை விட
தொலைவினில் சந்திப்போம்
சிறு புன்னகை பேசிப்போம்
காதலில் அன்பு மட்டும் நீடிக்கட்டும் சில காலம் கழிந்து கண்கள் சந்திக்கையில்...