Saiva Siddhanta

Sivagnana Mapadiyam - Aimbula vehdar Su.3


Listen Later

சிவஞான முனிவருக்கு மொத்தம் பன்னிரு சீடர்கள். அவர்களுள் முதல் மாணவர் கவிராட்சஷர் என்று போற்றப்படும் கச்சியப்ப முனிவர் (கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் வேறு இவர் வேறு). நா வன்மை மிக்கவர். இவரது வாதத் திறமைக்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். சிவஞான முனிவர் காஞ்சிபுரத்தில் 'காஞ்சி (ஏகாம்பரேஸ்வரர்) புராணத்தை' அரங்கேற்றிய போது தில்லை நடராஜர் துதியாகக் கடவுள் வாழ்த்துடன் தொடங்கினார். அப்போது அவர் மீது பொறாமை கொண்ட புலவர் அருகிலிருந்த ஓதுவாரைத் தூண்டிவிட்டு 'காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் புராணத்தில் கடவுள் வாழ்த்தாக ஏகாம்பரேஸ்வரரைப் பாடாமல் நடராஜரை ஏன் பாடுகிறீர்' என்று கேட்க சிவஞான முனிவர் சற்றே அதிர்ந்து போனார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தார்.



அப்போது அருகில் இருந்த கச்சியப்பர் அந்த ஓதுவாரைப் பார்த்து காஞ்சி தலத் தேவாரத்தை ஓதக் கேட்க அவரும் உடனே 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லி தேவாரப் பதிகத்தைப் பாட ஆரம்பித்தாராம். 'திருச்சிற்றம்பலம்' என்ற சொல் காதில் விழுந்ததுதான் தாமதம் 'நிறுத்தும்.. நிறுத்தும்… காஞ்சித் தலத்தின் தேவாரத்தில் 'திருஏகாம்பரம்' என்றல்லவா கூறித் தொடங்க வேண்டும். 'திருச்சிற்றம்பலம்' எங்கிருந்து வந்தது என்று எதிர்க்கேள்வி கேட்க 'எந்தத் தலத்துப் பதிகத்தை ஒதத் தொடங்கினாலும் முதலாகவும், நிறைவாகவும் 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்வதுதானே முறை' என்று பதிலளித்தார். இதைக் கேட்ட கச்சியப்பர் புன்னகைத்தவாறே 'இது உமக்கும் தெரியும், எமக்கும் தெரியும், சபையில் கூடியுள்ளவர்களுக்கும் தெரியும். ஆனால் உம்மைத் தூண்டிவிட்டுக் கேள்வி கேட்க வைத்த புலவருக்குத் தான் தெரியவில்லை' என்று சொல்ல அவையோர் ஆர்பரித்தனர். தூண்டி விட்ட புலவர் வெட்கித் தலைகுனிந்தார்.



திருவாவடுதுறை ஆதீனத்தில் இரண்டாவது குரவராக அமர வேண்டும் என்றும் அடுத்த பட்டம் குருமகா சந்நிதானமாக வர வேண்டும் என்றும் அப்போதைய குருமகா சந்நிதானமும், தம்பிரான்களும், அடியார்களும், பொது மக்களும் விரும்பினர். 'யாம் வணங்கப் பிறந்தோமே தவிர மற்றவர்கள் எம்மை வணங்கப் பிறக்கவில்லை' என்று அடக்கத்தின் மறுவுருவாக மொழிந்து குருமகா சந்நிதானமாகப் பொறுப்பேற்கும் மகத்தான வாய்ப்பை மறுத்தார். வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லியும், அருளாசி வழங்கியும், திருவாவடுதுறையிலேயே முக்தி அடைந்தார். திருவாவடுதுறை ஆதீனக் குல தெய்வமாகப் போற்றப்படும் அவரது சமாதித் திருக்கோயில் ஆதீனத் தோட்டத்தில் உள்ளது. குரு பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu