இளைய ராசா பதில்கள் நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்?"
``அது உங்கள் பாடு. வந்த சுவடு தெரியாமல் சென்றுவிடவே விருப்பம் எனக்கு!"
- ரா.கண்ணன், பொன்ஸீ -
தற்போது தங்களை நடத்திக்கொண்டிருப்பது பழைய நினைவுகளா... அல்லது நாளைய கனவுகளா...?"
``இரண்டுமே இல்லை. ஒரு மனிதனுக்கு வரும் பெருமைக்கும் சிறுமைக்கும் அவனா காரணமாக முடியும்? நான் இப்படித்தான் நினைப்பேன். இசையில் ஆர்வம் கொண்டேன். இங்கு வந்தேன். சந்தர்ப்பம் வந்தது. வேலை செய்தேன். பெயர் வந்தது. இப்படி ஒரு பெயர் எனக்கு இல்லாது போயிருந்தாலும் சந்தர்ப்பமே கிடைக்காது போயிருந்தாலும் இசை என்னை விட்டுப் போயிருக்காது. நானும் இசையை விட்டுப்போயிருக்க மாட்டேன்.
கங்கைக்கு - இப்போது அது போகும் பாதை கிடைக்காது போயிருந்தாலும் அது வேறு பாதையைத் தேடிக் கொண்டிருந்திருக்கும். வேறு பாதையில் அது போயிருக்க முடியும் என்றாலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பாதையில்தான் போகிறது என்பதால் இந்தப் பாதை அதற்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.
உங்கள் பாதிப்பில் உருவானவர்கள் நிறையபேர். `ராஜா மட்டும் குருதட்சணைன்னு கேட்க ஆரம்பிச்சா... இன்னிக்கு மியூஸிக் பண்ற பாதிப்பேருக்குக் கட்டைவிரல் பறிபோயிடும்'னு ஒரு ஜோக் உண்டு. நீங்க சொல்லுங்க... உங்கள் சிஷ்யன் யார்?"
``முதலாவதாக எனக்கு `குரு' என்ற எண்ணமே வந்ததில்லை. இசை என்பது சிவ சொத்து. ஆள் ஆளுக்கு அள்ளிக்கிட்டுப் போறாங்க. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது."
கார்த்திக், பவதாரிணி, யுவன்ஷங்கர் என்று உங்கள் மூன்று பிள்ளைகளும் இசைத்துறையில் கவனிக்கும்படியாக வளர்ந்துவருகிறார்கள். ஒரு முன்னோடி என்ற முறையில் அவர்களை எப்படிக் கணிக்கிறீர்கள்..?"
``கார்த்திக் மிகவும் புத்திசாலி. இசையில் அவனுடைய அணுகுமுறை வித்தியாசமானது. மற்றவர்களுக்கு வெகுநேரம் பிடிக்கிற வேலையை அவன் சில மணி நேரங்களில் செய்துவிடுவான். பவதா - நல்ல குரலை வைத்துக்கொண்டு பயிற்சி செய்யாமல் இருக்கிறாள். மிகவும் Spritual Purity உண்டு. யுவன் - எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே எல்லாமும் அவனுக்கு வரும். அப்படி ஒரு அமைப்புள்ளவன்.
மூன்று பேருமே வாய்ப்புகள் இருந்தும் கல்லூரிக்குப் போய் படிக்காமல் வேறு துறைகளில் ஈடுபடாமல் இசையிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
ஒரு தகப்பனாக நான் அவர்களுக்குத் தந்தது இந்த சுதந்திரம். தங்கள் அடையாளங்களைத் தேடி பாதைகளைக் கண்டெடுக்க வேண்டியது அவர்களே!"
நவீன இசை பற்றிய உங்கள் கருத்து என்ன..?"
``என் கவலையெல்லாம் சப்தங்கள் மீதுதான். நேற்று ரீ-ரிக்கார்டிங் பண்ணிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒன்று எழுந்தது. பத்துப் பதினைந்து விநாடிகள்தான் கேட்டிருப்பேன். எனக்குத் தலைசுற்றல் வந்து நான் தடுமாறிப் போனேன். என் பக்கத்தில் நின்றிருந்த உதவியாளரைப் பார்த்தால், ` இந்த சவுண்ட் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது சார்...' என்றார்.
சிந்தித்துப் பார்த்தால்... அதே மாதிரியான சப்தங்களைத்தான் இன்றைய இளைஞர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஒலிகள் அவர்களுக்குள் என்ன மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கும் என்று நினைத்தால் கவலை வருகிறது.
நமது மண்ணின் இசை எல்லாமே இயற்கை வாத்தியங்கள் தந்தவை. இப்போது விஞ்ஞானத்தின் எல்லைகள் விரிந்துகொண்டே போக கம்ப்யூட்டரே இசையமைக்கிறதாம். வார்த்தைகளை அள்ளிப்போட்டால் அதுவே பொறுக்கியெடுத்துப் புதுக்கவிதை எழுதுகிறதாம்.
`நானோ கீரைத்துண்டு
நீயோ மாமிசத்துண்டு
பிறகு எப்படி வரும்
நமக்கு காதல்?"
என்று மனிதனைப் பற்றி கம்ப்யூட்டர் ஒரு கவிதை எழுதியதாக நண்பர் சொன்னார். நான் சிரித்துக்கொண்டேன்."
``உங்கள் அம்மாவைப் பற்றி எப்போதும் பேசி வந்திருக்கிறீர்கள். ஆனால், உங்கள் அப்பா பற்றி நாங்கள் அறிந்ததில்லை..."
``என் அப்பா பெயர் ராமசாமி. சின்ன வயதிலேயே அவரை இழந்ததால் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. `கருவறையில் நிற்கிற சாமி' மாதிரி அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயம் கலந்த மரியாதையோடு விலகி நின்ற நினைவுதான் இருக்கிறது."
``உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் `கருவறையில் நிற்கிற சாமிதானா...?"
``இல்லை. என் மனைவிக்கு கணவன். குழந்தைகளுக்குத் தகப்பன். அவர்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ள ஒரு குடும்பஸ்தன்."
திரை இசையைக் கடந்து ஏதாவது செய்யவேண்டும்' என்ற தீவிர யோசனை வருவதுண்டா?"
``இசையில் ஆர்வமும் என்மேல் நம்பிக்கையும் உள்ள இளைஞர்களுக்கும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கும் சொல்கிறேன்.
இசைக்கென மட்டும் இசைந்து மன உறுதியும் வைராக்கியமும் கொண்ட புதியதொரு அமைப்பை உருவாக்குங்கள். அதில் வியாபாரத்துக்காக மட்டுமல்லாது இசையில் என்னென்னவெல்லாம் செய்ய முடிகிறதோ அதை எட்டுத்திக்கும் எடுத்துச்செல்லுங்கள். அப்போது என்னிடமிருந்து என்ன இசை வெளிவருகிறது என்று பாருங்கள்.
ஒருசிறு துரும்பு முதல் ஈரேழு புவனங்களையும் ஆட்டிப்படைக்கும் `சக்தி'