ஆசை
விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.
ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான்.
நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.