செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிற்றூர் ஆனூர். இங்கு மிகப்பழமையான சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மன், பார்த்திவேந்திர வர்மன் , முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராஜராஜன் முதலான மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தலமானது கல்வெட்டுக் களஞ்சியமாக காட்சி தருகிறது. கருவறையைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
சோழர் காலக் கல்வெட்டுக்களின் மூலம் இவ்வூரானது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் அமைந்திருந்தது என்பதையும், முதலாம் குலோத்துங்கச் சோழனது கல்வெட்டின் மூலம் இவ்வூர் 'ஆதியூரான சத்யாசிரிய குலகால சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில் இவ்வூரின் பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டில் இத்தலம் 'சித்திரமேழி விண்ணகரம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
முன் மண்டபத்தின் இடது புறத்தில் சீதா தேவி சமேத கோதண்டராம சுவாமி வீற்றிருக்கிறார். வலதுபுறத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பிரபையோடு ஒரு பக்த ஆஞ்சநேயர் மற்றும் பிரபையின்றி மற்றொரு பக்த ஆஞ்சநேயர் முதலானோர் அருளுகிறார்கள்.
வேத முழக்கங்கள் எந்நேரமும் இத்தலத்துப் பெருமாளைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். வேதநாராயணப் பெருமாளை தரிசித்தால் வேதங்களின் சக்தியால் நமது வாழ்வில் துன்பங்கள் யாவும் விலகி, கர்ம வினைகள் அழிந்து வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. ஆனூருக்கு மிக அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள நான்கு மலைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாக ஐதீகம். இம்மலைகள் வேதகிரி என்று அழைக்கப்படுகின்றன.
ஆனூர் தலத்தில் வருடப்பிறப்பு, புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு மற்றும் வைகுண்ட ஏகாதசி முதலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்