ஏழரை சனியும் அஷ்டமத்து சனியும் ஒரு மனிதனை ஆட்டி படைத்து விடும். கண்டச்சனியும் அர்த்தாஷ்டம சனியும் மனிதர்களை அசர வைத்து விடும். சனியால் சங்கடத்திற்கு ஆளானவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால் போதும் சனிபகவானை சந்தோஷப்படுத்த முடியும்..அள்ளிக்கொடுப்பாராம் சனிபகவான்.
ஏழரை சனி
ஏழரை சனி என்பதனை தோஷமாக கருதுவது தவறு என்பதனை நாம் முதலில் உணர வேண்டும். ஏழரை சனியை ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று முறை சந்திப்பார்கள். 22 வருடங்களுக்கு ஒருமுறை ஒருவருடைய ஜாதகத்தை ஏழரை சனி ஆட்சி செய்கிறது. இந்த சனி காலத்தில் சிறு சிறு தடங்கல்கள் மட்டுமே ஏற்படுமே தவிர, பெரிய தடங்கல்கள் ஏதும் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது தற்காலிகமே தவிர நிரந்தரமானது இல்லை. ஏழரை சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு ஏற்படும் பெரிய ஆபத்தை சிறிய தடைகள் மூலம் தடுத்து நிறுத்துவதே ஏழரை சனியின் வேலையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சனிபகவான் ஆட்சி செய்யும் போது ஏழரை சனியானது பிறக்கிறது. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து எள்ளுபொடி கலந்த தயிர் சாதத்தைக் காக்கைகளுக்கு படைத்துவர ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
ஜென்ம சனி
ஜென்ம சனி என்பது, ஒருவரின் ராசியில் சனிபகவான் ஒன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிறக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்மசனி நிகழும் போது, பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு ஏற்றார்போல துன்பங்கள் ஏற்படும் என்பது ஜோதிட வல்லுநர்கள் சொல்லும் வாக்கு. ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஜென்ம சனியின் தாக்கத்தைக் கட்டுபடுத்த உதவும். வியாழக்கிழமை தோறும் தஷிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை சாத்தி வழிபட்டால் நன்மை உண்டாகும்.
இதுபோன்ற ஆன்மிக தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்