வயது 12 தான்... வாலிப வயதில் கற்க வேண்டிய மறப்போர், சிலம்பம், வாள்வீச்சு, யானை, குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற பல வீரக்கலைகளை கற்று தலைசிறந்து விளங்கினான் அச்சிறுவன். மதுரை அருகே புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கண்ணில் தென்படும் ஆடு, மாடு, மக்களை அடித்து கொன்று வந்தது. இதனால் மக்கள் தெருவில் நடமாட அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மக்களின் அச்சத்தை போக்க மன்னர் விஜயரங்க சொக்கநாதர், மக்களை அச்சுறுத்தும் புலியை கொன்று வீழ்த்துபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்த அச்சிறுவன் தெருக்களில் அச்சமின்றி நடமாடினான். ஒரு நாள் ஊருக்குள் புகுந்த புலியை தன் கையில் இருந்த ஆயுதத்தாலேயே கொன்று வீழ்த்தினான். அரசரும் அறிவித்தபடி பரிசு வழங்கி அச்சிறுவனை பாராட்டினார்.
துணிச்சலும், வீரமும் கொண்ட அச்சிறுவனே பின்னாளில் புலித்தேவன் என்று போற்றப்பட்டான். இந்திய விடுதலைக்கு தென்னகத்தில் இருந்து குரல் கொடுத்தவர்தான் இந்த புலித்தேவன். யார் இவர்? இவரது ஆரம்ப காலக்கதையை அறிவோமா?வீரத்திற்கு பெயர் பெற்ற திருநெல்வேலி சீமையில் நெற்கட்டும்செவலின் பாளையக்காரராக திகழ்ந்த சித்திரபுத்திர தேவர் - சிவஞான நாச்சியார் தம்பதியினருக்கு 1.9.1715ல் மகனாய் பிறந்தவர் புலித்தேவர். இவரது இயற்பெயர் காத்தப்ப பூலித்தேவர்.‘இளங்கன்று பயம் அறியாது’ என்பார்கள். இதற்கேற்ப இள வயது முதலே எதற்கும் அஞ்சாத புலித்தேவன் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளை வேட்டையாடி புலித்தோல், புலி நகங்களை அணிந்து கொண்டார். புலியை வேட்டையாடுவதில் கில்லாடியாக திகழ்ந்தாலேயே இவரை அனைவரும் ‘புலித்தேவன்’ என்று அழைத்தனர்.
இவர் தமிழ் இலக்கணம், இலக்கிய நூல்களை படித்து தாமே கவிதை எழுதும் அளவுக்கு உயர்ந்தார். மகனின் அபார திறமையை கண்ட பெற்றோர் அவரை சிறிய வயதிலேயே பாளையக்காரராக பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
பூலித்தேவன்,தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ,அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ,வரி என்ற பெயரிலோ,ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது
1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான்.இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 12 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் அதிநவீன போர்கருவிகள், ஆங்கிலேய படைகள் மற்றும் தங்களுக்கு கீழ்படிந்த பாளையக்காரர்கள் என பெரும் படையுடன் போரிட்டு தான் மன்னர் பூலித்தேவரை தோற்கடித்தனர். அதன் பின் பூலித்தேவர்தலைமறைவானார்.