பெரியார். இவரை யார்தான் அறியார்?
திராவிடஞ் சூழ்ந்த இந்நிலப்பரப்பில் இவர் பேசாத பொருளில்லை. சமுதாயம் - மதம் - கடவுள் - சாதி - தத்துவம் - பெண்விடுதலை - பகுத்தறிவு - பண்டிகை - புராணம் - திருமணம் - கலை - கல்வி - தேசியம் - இயக்கம் - பொருளாதாரம் - பொதுநலம் - சமத்துவம் - நீதி கெட்டது - நீதி உள்ளது - நேற்று - இன்று - நாளை என இவர் பேசிவைத்த பட்டியல் இன்னும் நூற்றாண்டுகளுக்கு நீளும்.
சமத்துவத்தைக் கொள்கையாக்கி சுயமரியாதை மூட்டைக்கட்டி தொண்டைக் கவ்வும் மட்டும், இத்தொலகில் பேசித் திரிந்தவர். 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்த பெருவாழ்வில் எண்ணாயிரத்து இருநூறு நாட்களைச் சுற்றுப்பயணத்திற்கே செலவுசெய்தவர். எட்டு லட்சத்து இருபதாயிரம் மைல்கள் பயணம் செய்தவர். அதாவது பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு சுற்றி வந்தவர். இருபத்தோராயிரத்து நானூறு மணி நேரம் சொற்பொழிவாற்றியவர். இதனை ஓடவிட்டால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்குமென கவிப்பேரரசு வைரமுத்து ஒரு குறிப்பு கொடுக்கிறார்.
தமிழ்நாட்டின் அரசியல் பெரியாரை விரும்பியோ பெரியாரை எதிர்த்தோ வேண்டுமானால் செயல்படலாம். ஆனால் அவரை தவிர்த்து ஒருகாலும் ஒருவராலும் இயங்க முடியாது.
இத்தனைப் பெரிய கருஞ்சட்டைக்காரரின் வாழ்வில் ஒரே ஒரு கரும்புள்ளியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகமாக கிளைவிட அந்தக் கரும்புள்ளிதான் காரணம்; பெரியாரின் பின்பற்றுநர்கள் கண்ணீர் விட்டுப் பிரிந்து செல்ல அந்த ஒரு கரும்புள்ளிதான் காரணம். என்ன அது? பெரியார் - மணியம்மை திருமணம்.
வாழ்வின் இறுதி அத்தியாத்தில் ஒரு முதியோரின் மனம் வெறுப்புற்று தனிமைசோர்ந்திருக்கும் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதையே நாம் பெரியாரின் வாழ்விலும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தன் உடன்கூட்டத்தாரே, தன்னை உயிரோடு கொல்ல நினைப்பதாக ஏமாற்றம் கொள்கிறார். இயக்க அரசியலா - கட்சி அரசியலா என்பதில் தொடங்கிய வேற்றுமை, ராஜாஜி சந்திப்பில் பலம்பெறுகிறது; துக்கநாளா விடுதலை நாளா என்பதில் உறுதியாகிறது. பின்னர் அது பெரியார் மணியம்மை திருமணத்தில் வெடித்துச் சிதறுகிறது.
ஏன் இத்திருமணம்? இதற்கான சூழல் என்ன? இதற்கான கட்டாயம் ஏன் வாய்த்தது? இது ஏதும் அறியாத பலர், தனது மகளையே திருமணம் செய்துகொண்டவர்; தன் வளர்ப்பு மகளையே காம இச்சையால் கல்யாணம் செய்தவர் என்ற பொய்ப் புரட்டுகளை சேற்றில் வாரி இறைத்தபோதும் மௌனம் காத்தார் பெரியார். எங்கே இதனால் நம் இயக்கம் உதிர்ந்துவிடுமோ, இலட்சிய சிதைந்துவிடுமோ, திராவிடம் தாழ்ந்து விடுமோ என்ற அச்சப்படுகையில் மெல்ல தன் இதழ் விரித்து பேசத் தொடங்கினார்.
தன்னிலிருந்து பிரிந்த சென்று தி.மு.க உதயமான 15 நாட்கள் கழித்து, திருவாரூர் மாநாட்டில் பெரியார் உரைத்த தெளிவுறு பேச்சின் தேர்ந்துதெடுக்கப்பட்ட பகுதி இதோ..