திரு. பவா செல்லதுரை அவர்களின் சொல்வழிப் பயணம் நூல் திரு.ஜெகதீஷ் குமார் அவர்களின்மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் A Journey Through Words என்ற தலைப்பில் வெளியானது. இந்த நூலின் மீதான விவாதம், அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் உள்ள Writers Who Write என்ற எழுத்தாளர் குழுமத்தில் நடந்தது. பவ்லா பிகே பாட்ஸ், ஜெரால்டின் ஜென்கின்ஸ், ஆண்ட்ரியா எட்வர்ட்ஸ், ஸ்டீஃபன் சாட்விக், எல்.எம். போலர்ஸ் ஆகியோர் அடங்கிய எழுத்தாளர் குழுமம் இந்த நூலை வாசித்து, அதன் மீதான விவாதத்தை முன்னெடுத்தது. ஏதோ ஒரு அன்னிய நிலத்தின் கலாசாரத்தை இந்த நூலில் வாசித்தாலும், இந்த நூல் எழுப்பும் வினாக்களையும், அதன் உணர்வுகளையும் தன்னால் முற்றிலும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது என்று பேசிய ஒவ்வொரு எழுத்தாளருமே கூறினர். பவா செல்லதுரையின் எழுத்தின் வன்மை, அன்பின் வலிமை கடல் தாண்டியும், கண்டம் தாண்டியும் இதயங்களைத் தொட்டிருக்கிறது. சக மனிதனை நேசித்தல், அவனைப் புரிந்து கொள்ளுதல் என்பவை மட்டுமே இலக்கியத்தின் பணி என்றும், தன் பணி என்றும் மேற்கொண்டு வருபவர் பவா செல்லதுரை என்று நான் அவர்களிடையே பேசும் போது குறிப்பிட்டேன்.