கானக் கந்தர்வன் 82 🎸❤️
தாய்மையை
ஆண் குரலில் மொழி பெயர்த்தால்
அது சொல்லும்
ஜேசுதாஸ் என்று
எங்கள் பிரியப்பட்ட கானக் கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸுக்குப் பிறந்த நாள் என்று இன்றைய காலை நினைப்பூட்டியதுமே
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ....
என்று மனசு முணுமுணுத்துக் கொண்டது.
“கற்பூர பொம்மை ஒன்று” பாடலைக் கேட்கும் கணம் எல்லாம் உடைந்து கண்ணீரைப் பெருக்குவேன். தாய்மையின் இலட்சணம் என்றால் அது P.சுசீலாவின் பாடலில் தான் நெருங்கி உணர்ந்திருக்கிறேன். அது போலவே தான் “சின்னச் சின்ன ரோஜாப் பூவே செல்லக் கண்ணே நீ யாரோ” பாடலிலும் புதைந்து கரைந்து விடுவேன்.
ஆண் குரல்களில் ஜேசுதாஸ் ஓர் அபூர்வம், அந்தக் குரல் பாச ராகம் பாடும் போது தாய்மையின் ஆண் பால் இருக்கிறது. இதைச் சொல்லும் போதே “தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே” என்று விரல்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன.
“வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையை”
சோகப் பாடல்களில் ஜேசுதாஸ் ஒரு ஷெனாய் வாத்தியம் போல. அதனால் தான் எண்பதுகளில்
“அழகான புள்ளி மானே” என்று மனோஜ் - கியான் போட்டாலென்ன, “பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்” என்று ரவீந்திரன் மாஸ்டர் கொடுத்தாலென்ன, “ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனசை கொஞ்சம் தேத்திக்கிறேன்” என்று தேவேந்திரன் இசை கொடுத்தாலென்ன, அதுவுமில்லை “என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன?” என்று மெல்லிசை மன்னர் மீட்டினாலென்ன பாரபட்சம் இல்லாது முதுகைத் தடவி விடுகிறது ஜேசுதாஸ் குரல்.
குழந்தை வரம் தேடிய காலங்களில் ஒற்றைத் தோளில்
கற்பனைக் குழந்தையொன்றைக் கிடத்தி வாயசைத்திருக்கிறேன் “உயிரே உயிரின் ஒளியே ஒரு நாள் உறவா இதுவே”என்று.
திறமையான பாடகர், அழகான குரல் வளம் என்று எண்ணிக்கையில் பலரைச் சேர்த்து விட முடிகிறது. ஆனால் எங்கள் ஊனோடும் உயிரியோடும் ஒட்டியுறவாடும் ஆத்மார்த்த ராகம் என்றால் அது ஒரு சிலரில் தான் அடங்கி விடுகிறது.
“தாஸண்ணா” என்பது திரையுலகின் செல்லப் பெயராக இருக்கலாம் ஆனால் நடைமுறை வாழ்வியலில் அந்தக் குரலோன் ஒரு அண்ணன்காரனாக, தந்தையாகப் பரிமளித்திருக்கிறார்.
“குயிலே குயிலே கொஞ்சும் தமிழே
அமுதே அமுதே அன்பின் மலரே”
பாடலைக் காட்சி வடிவில் தரிசிக்காது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால், தன் தங்கைக்குத் தலை வாரிப் பூச்சூடிப் பள்ளிக்கு அனுப்பும் அண்ணன்காரன் தான் நினைப்புக்கு வருவான்.
சிந்து பைரவி எல்லாம் திரையிசையில் ஜேசுதாஸுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து திருவையாறு உற்சவத்தைத் திரை மேடையில் அரங்கேற்ற வைத்தது. மஹா கணபதிம் என்று சங்கீத ஜாம்பவான் தம்புரா நிழலில் மனமுருகும் போதும், கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் என்று காதலில் உருகி, பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே என்று சாக்கடையில் வீழ்ந்த போதும் ஜே.கே.பின் சங்கீதமாய் உயர்ந்து நின்றார் ஜேசுதாஸ்.
ஒரு கடைந்தெடுந்த் கர்நாடக சங்கீதக்காரரின் வாசனையைப் பாசி மணி விற்கும் பாமரனாய் நம் போல சங்கீதம் கற்காத ஞான சூனியங்களையும் ரசிக்க வைத்தது “கங்கைக் கரை மன்னனடி”.
எம்.ஜி.ஆர் காலந்தொட்டு எண்பதுகளின் நட்சத்திர நாயகர்கள் எல்லாம் இந்தச் சாஸ்திரிய சங்கீதக் குரலுக்கு வாயசைத்தாலும் அது உறுத்தாமல் பதியம் போட்டது. “பழமுதிர்ச் சோலை எனக்காகத் தான்” என்று துள்ளிப் பாய்ந்தோடும் நாயகனுக்குள்ளும் சாஸ்திரிய சங்கீத Oxygen ஐப் பாய்ச்சிக் காட்டினார்.
“நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே”, “உயிரே உயிரே உருகாதே” என்று சிந்து பைரவியின் நீட்சி ஒருவர் வாழும் ஆலயமாகப் பரிணமித்தாலும் அங்கே ஜேசுதாஸ் தான் இருப்பார்.
“சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே” எனும் நாயக பாவம் ஜேசுதாஸின் குரலின் தனித்துவம் பறையும்.
இந்தக் குரல் இதிகாச நாயகர்களைக் கற்பனையில் கண்டு நிஜத்தில் வடிக்கும் போது பொருந்திப் போவது.
இதில் தெய்வீகத் தன்மை உறைந்திருக்கும்.
அதெப்படி இந்தத் தெய்வீகக் குரல் அச்சொட்டாக ஒரு பட்டிக்காட்டான் பாடலுக்குத் தோதாய்
“நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன் காணல”
என்று ஒட்டிக் கொள்கிறது?
நம்ப முடியவில்லையா?
கையேந்தும் ஆட்டுக் குட்டி
கன்னிப் பொண்ணுக மாறதோ
மையேந்தும் கண்ணைக் காட்டி
மையல் தீரப் பேசாதோ”
என்ற வரிகளைக் கேட்டுப் பாருங்களேன் வயல் வெளிகளில் நடப்பார் அவர்.
ஜேசுதாஸுக்கும் நமக்குமான பந்தம் தொட்டிலில் தொடங்கியது.
“இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்” என்றும் “என்னை விட்டால் யாருமில்லை” என்றும் எம்ஜிஆருக்குக் குரல் கொடுத்ததையும், “மலரே குறிஞ்சி மலரே.....” என்ற அசரீரி ஒலியாகி, அந்தமானுக்கு அழைத்துப் போய் “அந்தமானும் உன் போல அழகு” என்று காட்டி விட்டு
“நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்”