கூடு
சும்மா!!!
அடையாளங்கள்-சிறுகதை - மலையாள மூலம் : சேது தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி
September 01, 2021

அடையாளங்கள்
மலையாள மூலம் : சேது
தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி
பேரன் சர்வதமனன் வைத்தியம் படிக்க சீமைக்குச் செல்கிறான் எனும் செய்தி நாராயணி அம்மாவுக்கு பெரிய அதிசயமாக இருந்தது.
“எதுக்குப்பா நீ கடல் கடந்து படிக்கப் போகணும், இப்பவே உனக்கு நெறைய தெரியுமே. டவுனிலே தான் உனக்கு பெரிய பேர் இருக்கே”
மிகவும் கனிவாகச் சிரித்தான் சர்வதமனன்.
“உண்மையைச் சொன்னா நமக்கெல்லாம் எவ்வளவு தெரியும் பாட்டி? இந்த உடம்புங்கறதே பெரிய சமுத்திரம் தானே? இனி எவ்வளவு ஜென்மங்கள் எவ்வளவு கடல்களைத் தாண்டினா கொஞ்சமாவது பிடி படுமோ என்னமோ?”
அதுவும் சரி தானே என்று பட்டது நாராயணி அம்மாவுக்கு. பெரிய வைத்தியரும் பண்டிதருமாக இருந்தார் மாமா. புகழ்பெற்ற விஷமுறிவு நிபுணரும். அவ்வளவு விஷஜந்துக்களின் பகையும் சாபமும் தான் ஒரு நடுஇரவில் ஏதோ ஒரு பொட்டல் காட்டின் சேறு புரண்ட இருட்டில் யார் கண்ணிலும் படாது நீலம் பாரித்த மரணம். மாமாவின் கால்களை வெகு நேரம் ஆராய்ந்த கீழ்வீட்டில் தாத்தா சொன்னார்
“சர்ப்பம் தீண்டினதாகத் தெரியல.”
“ஏன்?”
“கடிவாய் அடையாளமே இல்லையே,ஊசிப்பொட்டளவு கூட. விஷ லட்சணுமும் இல்லே.”
“அப்புறம்?”
“காரணமற்ற நீலம் பாரித்த மரணம் தான் சில மேதைகளுக்கு விதிக்கப்பட்டதாக இருக்கலாம்.”
“அதெப்படி தாத்தா?”
“நீலத்தை விட ஆழமானது எது இருக்கு ? அப்படி ஆழ்ந்த ஒரு நித்திரைனு நெனச்சுக்க வேண்டியது தான் . எழுப்பிப் பாக்கறுது முட்டாள்தனமா இருக்கும்.”
முன்னால், தொட்டுவிடும் தொலைவில் எங்கோ, நீலம் தோய்ந்த இருளின் மறைவில் படமெடுத்து நிற்கும் கருநாகத்தைக் கண்டு பயந்தது போல பாட்டி சொன்னார்
“கவனமா இரு மகனே.”
“ஏன் பாட்டி?”
“தெரியாத இடத்திலே பத்து கண்ணு இருந்தாலும் போதாது. நாலு பக்கமும். அவ்வளவு காதும்.”
“ஐயோ, இன்னும் ஐம்பது புலன்களின் கூடுதல் பொறுப்பா? இப்போ இருக்கறதே அதிகம். என்னவெல்லாம் பாக்கவும் கேக்கவும் வேண்டியிருக்கு ஒவ்வொரு நாளும்.”
“எனக்கு மொதல்லே இருந்தே பிடிக்காத நிறம் நீலம். போதாததுக்கு தேவையில்லாம அவ்வளவு ஆழமும்.”
“நான் அங்கேயிருந்து ஏதாவது குட்டி தொரைசாணியைக் கூட்டிட்டு வந்துடுவேன் நெனைக்கறீங்களா?” சர்வதமனன் செல்லமாக அவர் தோளைத் தட்டினான்.
“சீ ,அதெல்லாம் கண்டிப்பா நடக்காதுன்னு எனக்குத் தெரியும். தோல் செவப்பா இருந்து என்ன புண்ணியம். சுத்தபத்தம் வேண்டாமா? வெளிக்கு போனா கழுவ மாட்டாங்களாமே.”
அடக்கமாட்டாத சிரிப்பு அவனுக்கு.
“வெள்ளைக்காரங்களை விரட்டி அடிச்சிட்டு நம்ம பையன் எதுக்கு அங்க அடிமை வேலைக்கு போகணும்னு நெனைக்கறீங்க போல.” அவன் சொன்னான்.”வெளிநாட்டுத் துணிகளை எரிக்க எடுத்து வீசினதிலே மொதல்லே விழுந்தது பாட்டியோட சீமைப் பட்டு னு நான் கேள்விப்பட்டிருக்கேன்.”
அன்றிலிருந்து துவங்கியது தான் இந்த முரட்டுக் கதர் ஆடை. கோயிலின் முன் கூடிய சிறு கூட்டத்தினை உணர்ச்சிக்கடலில் தத்தளிக்க வைத்தது மாதவ்ஜி எனும் இளைஞனின் பேச்சு. சுண்டி இழுக்கும் கண்கள். இனிமையான குரல். கையில் அணிந்திருந்த மூன்று வளையல்களையும் உருவிக் கொடுத்தாள். கழுத்திலிருந்த ஏழு சவரன் காசுமாலையினையும். மீண்டும் ஒரு முறை கூட காணக் கிடைக்கவில்லை மாதவ்ஜியை, பார்க்க வேண்டும் எனும் ஆசை நிறைய இருந்தும்.நிறைய திட்டினார் மாமா. நகைகளை கொடுத்ததற்கு அல்ல. ஊர் மத்தியில் கூட்டத்தில் நடந்துக் கொண்டது திமிர் தான். நல்ல குடியில் பிறந்தவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
பாட்டி நாற்புறமும் சந்தேகத்துடன் பார்த்தார். நடையின் இருட்டின் கருமையில் நீலத்தின் ஈரம் படர்ந்தது போல் இருந்தது.
“உடம்பு முடியாதவர்களுக்கு வைத்தியம் செய்வது பெரிய புண்ணியம் தான் மகனே. சந்தேகமே இல்லை . ஆனால் அதில் அவ்வளவுக்கவ்வளவு தெய்வ குத்தமும் இருக்குங்கறதையும் ஞாபகம் வெச்சுக்கோ .”
சர்வதமனின் விழியோரங்களில் ஒரு குறும் புன்னகை ஒளிர்ந்தது.
“பாட்டி, பாவம் நான், இவ்வளவு பெரிய விஷயங்களெல்லாம் எனக்கு எப்படி புரியும்.”
அது காதில் விழாதது போல நாராயணி அம்மாள் தொடர்ந்தார்.
“வைத்தியனா இருந்தாலும் இல்லை வேறு எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் ஒருத்தனோட தலைவிதியை மாத்த நினைக்கறது தலைக்கனம் தானே. கூடவே அது தெய்வ குத்தமும் இல்லையா.”
“அப்படி தலைவிதியை மாத்த நினைச்சவுங்களைத் தானே உலகம் ஞாபகம் வெச்சிருக்கு.” தன் லேசான செம்பட்டை தாடியினைத் தடவி சர்வதமனன் தொடர்ந்தான். “நெனச்சுப் பாத்தா இந்த மனுஷ ஜென்மம்னு சொல்றது பல வலிகள் மட்டும் தானே. அங்கங்கே கொஞ்சம் வெளிச்சமும் சுகமும்.”
“ஏன்பா அப்படிச் சொல்லறhttps://koottupuzhu.blogspot.com/