தவமது செய்தாலும் என்ன?… நீ
சமத்தன் என்றேபே ரெடுதாலும் என்ன?
சிவபீசை செய்தாலும் என்ன?….அரன்
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன?
காசிபோய் வந்தாலும் என்ன? … இந்தப்
பூலோகம் தன்னில் மறைந்திருந்து என்ன?
திராசு நிலையாய் இருந்து என்ன?…. தினம்
சிவசிவா என்றே செபித்தாலும் என்ன?
வித்தைகள் பலபடித்து என்ன?
மென்மேலும் சாத்திரம் கற்றாலும் என்ன?
சித்துகள் தெரிந்தாலும் என்ன? …. நாளும்
சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன?
பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன?…முதிர்ந்த
பெரியோர்கள் பாதத்தைப் பூசித்தும் என்ன?
துண்டாகப் போயிருந் தென்ன?…. நீ
துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன?
மாடிமேல் வீடிருந்து என்ன?… இந்த
வையகத் தோர்மெய்க்க வாழ்ந்தாலும் என்ன?
கூடிக் குலாவி இருந்த தென்ன?…. கையெடுத்துக்
கும்பிட்டுக் கூத்தாடித் திரிந்தாலும் என்ன?
பிர்ம சொரூபத்த நாடு …. உள்
கர்ம வினை ஓட வழிதனைத் தேடு…..
எட்டி பழுத்தாலும் என்ன?….. காசு
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன?
சுட்டி வராகனிருந்து என்ன?
காவல்கள் போட்டுநீ காத்திருந்து என்ன?
நீரிலாக் கிணறு இருந்தென்ன? மனம்
நோய நடவாத பிள்ளையிருந்து என்ன?
ஊரிலா ஆறிருந்து என்ன?….. நமக்கு
உதவி இல்லாத மனிதர் உறவிருந்து என்ன
தாய் தந்தை துணையிருந்து என்ன?…உற்ற
சனங்களும் உபகாரமாய் இருந்த தென்ன?
நாய்போல் அலைந்தாலும் என்ன? …வரும்
நமனுக்குத் தப்பி ஒழிந்தாலும் என்ன?
சரியை கடந்திடவும் வேணும்…இந்தச்
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும்…
கிரியையைப் பார்த்தறிய வேணும்….மனவாக்குக்கு
எட்டாத சொரூபத்தைத் தெரிந்திட வேணும்!…….
யோகந் தெரிந்திட வேணும்…உனக்கு
உண்டிமுதல் ஆனதச் சுருக்கிட வேணும்…
பாகமது தெரியவே வேணும்……குரு
பாதமதை மறவாமல் இருந்திட வேணும்…
கொலைகளவு நீக்கிவிட வேணும்…உலகில்
கொடியோன் எனும்பேரைப் போக்கிட வேணும்…
புலைகளைத் தொலைத்துவிட வேண்டும்… இன்று
பொல்லாத மாயையை விலக்கிட வேணும்….
சோதியக் கண்டு அறிய வேணும்….வேதச்
சுடரெனும் தீபத்தைப் பார்த்தறிய வேணும்….
ஆதிப்பிர் மந்தெரிய வேணும் ….அதை
அன்புடன் சாத்திரத் தால்தெரிய வேணும்…
ஞானநிலை தெரியவே வேணும்… இதில்
நால்வேத உண்மை தெரிந்திட வேணும்…
மோனநிலை தெரியவே வேணும்…யோக
முடிவான வத்துவை முன்தெரிய வேணும்…
அட்டகரு மம்தெரிய வேணும்…அதற்கு
ஆதார மானஆலை தெரிய வேணும்…
திட்டமாய் வாசிநிலை வேணும்….. இதைத்
தெரிந்துகொண் டால்சித்தன் ஆகவே வேணும்…
பந்தங் கடந்தவனே சித்தன்…பாரில்
பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன்
இந்தவிதந் தெரிந்தவனே சித்தன்….அதில்
என்நிலைமை கண்டவனே சீவ முத்தன்…
Krishnaalaya ravi