புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் 1946-இல் பிறந்தவர் (மறைவு: செப்டம்பர் 16, 2009). அவர் மறைந்து 11 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இன்றும் தனது நகைச்சுவை பேச்சுகளின் மூலம் தமிழ் மக்களிடையே உயிருடன் உலா வருகிறார்.
எதிர்காலத்தில் தனது பேச்சு நவீன சாதனங்களில் உலா வரும் என்று நகைச்சுவையாகக் கூட ஒருமுறை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நகைச்சுவை உணர்வுடன் கூறியது இன்று உண்மையாகியுள்ளது. ஆம், போட்காஸ்ட் உள்பட எதிர்கால நவீன சமூக ஊடங்களில் என்றும் இளமையாக அவரது பேச்சு உலா வரும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம் அவரது நகைச்சுவை கலந்த கருத்துக்கள் என்றைக்கும், எந்த தலைமுறைக்கும் பொதுவானதாக அமைந்துள்ளதுதான்.
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கி்ய அதில் உதவி இயக்குநர் பதவி வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சிகளிலும் அவரது பேச்சு இடம்பெற்றது. இந்த நாள் இனிய நாள் தலைப்பிலான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதயநோய் பாதிப்பைச் சந்தித்த அவர் போரூர் மருத்துவமனையில் 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை பகல் 12:40 மணிக்கு தனது 63-ஆவது வயதில் காலமானார். அவருக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர்.