தானென்ற வுலகத்திற் சிறிதுபேர்கள்
சடைபுலித்தோல் காவிவஸ்திரந் தாம்பூரம் பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல்பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானியென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சையென்பார்
திருமாலைக் கண்ணெதிரே கண்டேனென்பார்
கானென்ற காட்டுக்குள் தேவர்கோடி
காரணத்தை யறியாமற் கதறுவாரே.
கதறுகின்ற பேர்களய்யா கோடாகோடி
காரணத்தை யறிந்தவர்கள் கொஞ்சம்கொஞ்சம்
பதறுகின்ற பேர்களெல்லாம் பரமார்த்தத்தைப்
பக்தியினாற் பார்த்தவர்கள் சுருக்கமப்பா
உதறுகின்ற பேர்களையா வுலகத்துள்ளே
உதித்தகலை தன்னிடத்தி லறியமாட்டார்
சிதறுகின்ற பேர்களைப்போற் சிதறிடாமற்
சிவசக்தி வரும்பாதை தன்னில்நில்லே.